டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் அதிமேதகு சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில், பேரிடர் மேலாண்மையில் டிஜிட்டல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் டாக்டர் ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால மற்றும் பேரிடர் மேலாண்மை மத்திய நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அரசாங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, பாஸ்கராச்சார்யா விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவித்தகவலியல் நிறுவனத்தினால் (BISAG) உருவாக்கப்பட்ட பேரிடர் பாதிப்பு மதிப்பீட்டுத் தளத்தின் (Disaster Impact Assessment Platform) செயல்விளக்கம் அமைந்தது. பேரிடர் மேலாண்மை மத்திய நிலையம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் GovTech Sri Lanka ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்தத் தளம், மேம்பட்ட புவிசார் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இலங்கையின் பேரிடர் தயார்நிலை, துரித நடவடிக்கை மற்றும் பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சிகளை எவ்வாறு கணிசமாக மேம்படுத்தலாம் என்பதை எடுத்துக் காட்டியது.
மேலும், இந்தியாவின் முதன்மை தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான C-DOT இனால் உருவாக்கப்பட்ட, மொபைல் ஒளிபரப்பு வழி ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் (Early Warning System - EWS) சாத்தியக்கூறு ஆய்வு (Proof of Concept) சமர்ப்பிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் புதுமையான டிஜிட்டல் தீர்வுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம் தொழில்நுட்ப அடிப்படையிலான வலுவான பேரிடர் மேலாண்மை கட்டமைப்பை வளர்ப்பதற்கான இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.





